Tuesday, 4 March 2014

மொஸாட் - என்.சொக்கன்

மொஸாட். பெயரைக் கேட்ட கணமே ஒரு திரில்லைத் தரும் இஸ்ரேலிய உளவுத் துறை.

தன்னைச் சுற்றி எந்தச் சுவருமின்றி, தரையில் எந்தச் சுகமுமின்றி, எந்நேரமும் உயிர் குடிக்கப் பாயும் விலங்கை எதிர்ப்பார்த்தே துயிலும் காட்டு மனிதனின் உணர்வுகளே மொஸாட்டிற்கு அடிப்படை.



சின்னஞ்சிறு இஸ்ரேல் நாட்டை, விட்டமாய் வளைத்திருக்கும் பகை நாடுகளிடமிருந்து தற்காக்கவும், சதியை மோப்பம் பிடிக்கவும், தானே சதியை முறியடிப்பதோ அல்லது தாக்குதலுக்கு தன்னாட்டு ராணுவத்திற்குத் திட்டமிட்டுக் கொடுப்பதோ மொஸாட்டின் பிரதான வேலைகள்.

மொஸாட் விதைந்து வளர்ந்ததை, செயல்பட்டதை, சாதித்ததை... எளிமையாய், அழகாய், கோர்வையாய், கதை சொல்லியாய் ‘மொஸாட்’ புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர் என். சொக்கன்.

72-ல் ஜெர்மனியின் மியூனிக் நகரில், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்படும் பரபரப்புடன் புத்தகத்தைத் துவங்குகிறார். கொதித்தெழுந்த இஸ்ரேலியப் பிரதமர், இதற்கு காரணமானவர்களை வேட்டையாட முடிவெடுக்க, மொஸாட் அறிமுகம்.

படுகொலையை நிகழ்த்திய பாலஸ்தீன தீவிரவாதிகளை லிஸ்ட் எடுத்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? சொக்கனும் நம்மை இப்படிக் கேட்க வைத்து, இத்தாலி, பிரான்ஸ், ஏன் பாலஸ்தீனர்களின் கோட்டையான லெபனான் ஆகிய நாடுகளில் மொஸாட் எப்படி வேட்டையாடியது என்பதை, புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில், ஒன்-டே மேட்ச்சின் முதல் பவர்-பிளேயைப் போல விறுவிறுவெனச் சொல்கிறார்.

முதல் சம்பவத்தின் வேட்டை முடிந்தபோது, உலகில் எந்த மூலையிலும் யூதனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மொஸாட் பாய்வதைச் சொன்ன சொக்கனின் அடுத்த ஜம்ப் - அடால்ப் ஐக்மென்.

ஹிட்லர் தலைமையில் யூதர்களை இலட்சக் கணக்கில், கர்ண கொடூரமாய்க் கொன்று குவித்த தளபதி. இவரையும் அர்ஜெண்டினாவில் தேடிக் கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இப்போது மொஸாட்டின் நதிமூலத்தைக் காட்ட வருகிறார் சொக்கன். அரேபியர்களின் தேசமான பாலஸ்தீனத்தில் மைனாரிட்டியான யூதர்களின் பாதுகாப்பின்மையே மொஸாட்டிற்குப் பிள்ளையார் சுழி.

இந்தக் காலக் கட்டம், இஸ்ரேல் உருவானதற்கு முன்பா, பின்பா என்று வாசகனுக்கு குழப்பம் வருகிறது.

அத்தியாயம் 7. யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த இனப் படுகொலை. அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை.

 இந்த ஒரு வரி, 11-ஆம் (நதிமூல) அத்தியாயம் படிக்கும்போது நினைவில் இல்லாவிட்டால், அதுவும் இனப் படுகொலையின் கால கட்டத்தை, வாசகன் அனுமானிக்காவிட்டால், குழப்பம் மிஞ்சும். எப்போதும் இணைப்புகளைச் சரியாக முடிச்சிடும் சொக்கன் இங்கே சற்றே அசந்து விட்டார்.

புத்தகத்தின் பிற்பாதியை படுவேகமாக நகர்த்துகிறார் சொக்கன். மிக், 200 டன் யுரேனியம், போர்ப் படகுகள் ஆகியவற்றை ஈராக், பெல்ஜீயம், பிரான்ஸ் நாடுகளிடமிருந்து மொஸாட் கடத்தும் ’அட்றா சக்க..’ சம்பவங்கள். எகிப்து, ஈராக் மீது விமானத் தாக்குதல்கள். இவற்றைப் படிக்கும் போது மொஸாட்டின் மீது பிரமிப்பும், மரியாதையும் வருகிறது.

உடனே மொஸாட் பல்பு வாங்கிய சம்பவங்களையும் புன்னகைக்கும் விதமாய் சொக்கன் தருகிறார்.

மொஸாட்டின் உளவாளிகளாகட்டும், அல்லது அவ்வமைப்பிற்கோ, யூதர்களுக்கோ உதவும் எவரையும், மொஸாட் காக்கவும், கௌரவப்படுத்தவும் முயலும் என்பதை, ஷூலா என்ற பெண்மணியின் நெகிழ்வான சம்பவம் மூலம் விளக்குகிறார். இந்த அத்தியாயத்தை புத்தகத்தின் கடைசி பகுதியில் வைத்திருந்தால் இன்னும் நெகிழ்வாக முடிந்திருக்கும்.

இருப்பினும், புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஒரு நல்ல திருப்தி. நன்றி சொக்கன்.

நன்றி : காஞ்சி ரகுராம்
http://kanchiraghuram.blogspot.in/2014/03/blog-post.html


இணையத்தில் வாங்க...


Monday, 3 March 2014

உனக்காகவே மயங்குகிறேன் - யாத்விகா

 காதல் கவிதைகள் எழுதுவதில் ஏன் பெண்களால் ஆண்களை மிஞ்ச முடியவில்லை என்று தெரியவில்லை. தபூ சங்கர், கட்டளை ஜெயா போன்ற காதல் கவிஞர்களுக்கு தனி வாசகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஏன் ஒரு பெண் எழுத்தாளர் ‘காதலை’ கொட்டி கவிதை எழுத முடியவில்லை.

’காதல்’ என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால், ஆண் கவிதைகளில் இருக்கும் காதல் ரசம் பெண் எழுதும் கவிதைகள் குறைவாக எனக்கு படுகிறது. (ஒரு வேளை இன்னும் அதற்கான கவிதை நான் தேடி படிக்கவில்லை என்றுக் கூட இருக்கலாம்.)

கவிதை எழுதுவதை துறந்தாலும், காதல் கவிதை, ஹக்கூ கவிதைகளை மட்டும் வாசித்து வருகிறேன். பத்து வருடம் பின்னோக்கி கல்லூரி நாட்களுக்கு செல்ல வேண்டும் என்றால் காதல் கவிதைப் போல் சிறந்த புத்தகம் இல்லை.

 அப்படி சமீபத்தில் வாசித்தது யாத்விகா எழுதிய ” உனக்காகவே மயங்குகிறேன்”



காதல் கவிதைகளுக்கு டெம்ளேட்டான படங்களை நிரப்பிய கவிதை தொகுப்பு தான். கௌதம் மேனன் படங்களில் பெண்ணின் காதலையும், தவிப்பையும் அழகாக சொல்வது போல் ஒரு சில கவிதைகளில் யாத்விகா சொல்லியிருக்கிறார்.

ஐயோ 
அப்படி பார்க்காதே ! 
என் 20 வருட 
அழகும் இம்சிக்கிறது 
என்னை…! 
அடிக்கடி 
கண்ணாடி பார்க்கச் சொல்லி ! 

** 

அசுரனே 
இப்படியா 
நினைப்பாய்… 
24 மணி நேரமும் 
விக்கல் எடுக்கிறது 
எனக்கு 

சில கவிதைகளில் ஆண்பால், பெண்பால் குழப்பம் ஏற்ப்படுகிறது. ஒரு பெண் பார்வையில் இந்த புத்தகம் நகர்கிறது என்று நினைத்தால், ஒரு ஆண்ணின் பார்வையில் சில கவிதைகள் வருகிறது.  ஒரு சில கவிதைகள் எங்கோ கடந்த வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்ற கவிதைகள் எழுதுவதை விட காதல் கவிதைகளுக்கு பல சவால்கள் இருக்கிறது. இலக்கிய அந்தஸ்து கிடைக்காது. படிக்கும் பல வாசகர்களுக்கு காதல் பரிட்சயமானதாக இருக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. அதையும் மீறி படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சில கவிதைகள் அமெச்சூர் தனமாக இருக்கும். இதையெல்லாம் மீறி காதல் கவிதைகள் வெல்வது கடினம்.

யாத்விகா… கவிதை என்ற வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் சிறுகதை, நாவல் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

நன்றி : குகன்

இணையத்தில் வாங்க..... இங்கே